July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘உறவுகள் மேலும் வலுப்படும்’: இலங்கைக்கு இந்தியப் பிரதமர் வாழ்த்து!

File photo : high commission of india / hcicolombo.gov.in

இலங்கையின் 73 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் மகிந்த ராஜபக்ஷவிற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்திய உயர்ஸ்தானிகராலயம் ஊடாக அனுப்பி வைத்துள்ள இந்த வாழ்த்துச் செய்தியில் இரு நாடுகளுக்கும் இடையில் ஆழமாக வேறூன்றியுள்ள உறவு குறித்து மோடி வலியுறுத்தியுள்ளார்.

மொழி, மதம் மற்றும் கலாச்சாரத்தின் அடிப்படையில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இரு நாடுகளுக்கும் இடையில் ஒற்றுமையையும் ஒத்துழைப்பையும் நிலவுவதாகவும் கடந்த ஆண்டு, கொவிட்-19க்கு எதிரான போராட்டத்தில் கூட்டாக செயற்பட்டதன் மூலம் இருதரப்பு உறவுகள் வலுப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் இரு நாட்டு மக்களினதும் முன்னேற்றம் மற்றும் செழிப்புக்காக மேலும் உறுதியுடனும் பங்களிப்புடனும் இணைந்து செயற்பட உள்ளதாகவும் இந்தியப் பிரதமர் கூறியுள்ளார்.

கொரோனா பெருந்தொற்றுக்கு நடுவிலும் இருநாட்டு உறவுகள் அபிவிருத்தி, வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில்  முக்கிய முன்னேற்றங்களை கண்டுள்ளதாகவும் இந்தியப் பிரதமர் தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.