![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2021/01/9ddd84ad-9b4f-481f-b8f9-83bf29ff8492.jpg?fit=1024%2C683&ssl=1)
இலங்கையில் மார்ச் மாத முதலாம் வாரத்திற்குள் 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசியை வழங்கும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்க முடியுமாக இருக்கும் என்று இராஜாங்க அமைச்சர், விசேட வைத்திய நிபுணர் சுதர்ஷனி பெர்ணாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
இந்தியாவினால் வழங்கப்பட்டுள்ள கொவிட் தடுப்பூசிகளை சுகாதார மற்றும் பாதுகாப்புத் தரப்பினருக்கு வழங்கும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், இந்த நடவடிக்கை முடிவடைந்த பின்னர் அடுத்தக்கட்டமாக கொள்வனவு செய்யப்படவுள்ள தடுப்பூசிகளை வயோதிபர்களுக்கு வழங்க எதிர்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கம்பஹா கட்டான பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தற்போது சுகாதார மற்றும் பாதுகாப்பு தரப்பினருக்கு வழங்கப்படும் கொவிட் தடுப்பூசியின் இரண்டாம் கட்டம் இன்னும் இரண்டு வாரங்களில் இடம்பெறவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.
இதேவேளை வெகுவிரைவில் தடுப்பூசிகளை கொள்வனவு செய்யும் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாகவும், இதன்படி அவற்றை கொண்டுவர தேவையான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி கொண்டு வரப்படவுள்ள தடுப்பூசிகளை செலுத்தும் போது, ஒவ்வாமை உள்ளிட்ட பக்கவிளைவுகள் ஏற்படுமாயின், அதற்காக சிகிச்சை வழங்கவும், அதன் பின்னர் ஏற்படும் நோய் அறிகுறிகள் தொடர்பாக பரிசோதனைகளை முன்னெடுப்பதற்கும் சுகாதார தரப்பினர் தயாராகவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.