June 17, 2025 20:23:20

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தமிழுக்கு முன்னுரிமை வழங்கி யாழ். நெடுந்தூர பேரூந்து நிலையத்தில் பெயர் பலகைகளை திருத்த நடவடிக்கை

யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ள நெடுந்தூர பேரூந்து நிலையத்தில் பெயர் பலகைகளில் சிங்கள மொழி முதலில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், அதில் தமிழுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் அந்தப் பெயர் பலகைகளை திருத்துவதற்கு யாழ். மாநகர மேயர் வி.மணிவண்ணன் நடவடிக்கையெடுத்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்னர் அந்தப் பேரூந்து நிலையம் திறந்து வைக்கப்பட்டது. அங்கு காணப்பட்ட ஊர்களின் பெயர் பலகைகளில் முதலாவதாக சிங்களத்திலும், இரண்டாவதாக தமிழிலும், மூன்றாவதாக ஆங்கிலத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளன.

அரச கருமமொழிக் கொள்கைக்கு அமைய தமிழ் பிரதேசங்களில் பெயர் பலகைகளில் தமிழே முதலாவதாக அமைய வேண்டும்.

பேரூந்து நிலையத்தில் காணப்படும் பெயர் பலகைகள்

இதன்படி யாழ். நெடுந்தூர பேருந்து நிலையத்தில் காணப்பட்ட சகல பெயர் பலகைகளிலும் தமிழை முதலாவதாக கொண்டு வரும் வகையில் அவற்றை திருத்துவதற்கு மாநகர மேயர் நடவடிக்கையெடுத்துள்ளார்.