July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பல்கலைக்கழகங்களுக்கு மேலதிகமாக 10 ஆயிரம் மாணவர்களை அனுமதிக்க தீர்மானம்

பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானம் எடுத்துள்ளது.

அதன்படி இந்த ஆண்டில் இருந்து சகல பல்கலைக்கழகங்களுக்கும் பத்தாயிரம் மேலதிக மாணவர்களை இணைத்துக்கொள்ளவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் பிரதமருடன், கல்வி அமைச்சருடன் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்ததற்கமைய இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு அதிகளவில் மாணவர்களை இணைத்துக்கொள்ள வாய்ப்புகள் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

2019 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைகள் பழைய மற்றும் புதிய முறைமைக்கு அமைய நடத்தப்பட்டதனால் வெட்டுப்புள்ளிகள் தொடர்பாக பிரச்சினைகள் எழுந்துள்ளன.

அதற்கமைய வெட்டுப்புள்ளிகள் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் மாணவர்கள் நிராகரிக்கப்படும் எண்ணிக்கை குறித்த பிரச்சினைகளை தீர்க்கும் விதமாகவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும்  அவர் குறிப்பிட்டுள்ளார்.