
இலங்கையின் நீர்கொழும்பு சிறைச்சாலையில் சிறைக் கைதிகள் ஒன்றிணைந்து, களியாட்டங்களில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகள் களியாட்டங்களில் ஈடுபடும் விதத்திலான வீடியோக்கள் ஊடகங்களில் வெளியாகியதைத் தொடர்ந்தே, விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சிறைச்சாலைகள் திணைக்களம் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ஆகியன ஒன்றிணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
நீர்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் பொறுப்பதிகாரி அனுருத்த சம்பாயோவின் பதவிக் காலத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறைக் கைதிகளுக்கு சட்ட விரோதமாக சொகுசு வசதிகள் ஏற்பாடு செய்துகொடுத்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டிருந்த முன்னாள் பொறுப்பதிகாரி அனுருத்த சம்பாயோ, அண்மையில் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
நாட்டின் எந்தவொரு சிறைச்சாலையிலும் தற்போது அவ்வாறான களியாட்டங்கள் இடம்பெறுவதில்லை என்று சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.