June 16, 2025 23:09:53

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இலங்கையில் கொரோனா தடுப்பூசி வழங்கப்படவுள்ள முன்னுரிமை பட்டியல் இறுதி செய்யப்பட்டது’

Shavendra-Silva-

இலங்கையில் கொரோனா தடுப்பூசி வழங்கும் பணிகள் இம்மாத இறுதியில் ஆரம்பிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதல் கட்டமாக கொரோனா தடுப்பூசி வழங்கப்படவுள்ள முன்னுரிமை பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

கொரோனா தடுப்பூசிகள் வழங்கும் திட்டம் தொடர்பில்  விளக்கிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

அதன்படி, கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள முன்னணி தொழிலாளர்களுக்கு தடுப்பூசிகள் வழங்கப்படும் எனவும் தடுப்பூசி வழங்குவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டதன் பின்னர் இராணுவத்தினரால் எடுத்துச் செல்லப்பட்டு கொழும்பில் சேமித்து வைக்கப்படவுள்ளதாக இராணுவ தளபதி மேலும் கூறினார்.

அதன்பிறகு, ஜனாதிபதியின் ஆலோசகர் லலித் வீரதுங்கவின் கீழ் உள்ள பணிக்குழு தடுப்பூசியை வழங்குவதற்கான நிலையங்களுக்கு கொண்டு செல்வது மற்றும் சேமிப்பது தொடர்பான அனைத்து செயற்பாடுகளையும் கையாளும் என்று இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

அத்துடன் தடுப்பூசிகளை களஞ்சியப்படுத்துவதற்கு ஏதுவான இடங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவ்வாறான இடங்களுக்கு தேவையானோர் வரவழைக்கப்பட்டு அவ்விடங்களிலேயே தடுப்பூசி வழங்கப்படும். மாறாக ஒவ்வொரு இடங்களுக்கும் எடுத்துச் சென்று தடுப்பூசி வழங்கப்படமாட்டாது என்றார்.