July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மன்னார் சாவக்கட்டு கிராமத்தில் வீடுகளுக்குள் புகுந்து வன்முறைக் கும்பல் அட்டகாசம்!

மன்னார் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட சாவக்கட்டு கிராமத்தில் வீடுகளுக்குள் அத்துமீறி புகுந்த இளைஞர் குழுவொன்று அங்கிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியதால் நேற்று இரவு அந்தப் பகுதியில் பெரும் பதற்ற நிலைமை ஏற்பட்டிருந்தது.

வீடுகளுக்குள் நுழைந்த நபர்கள் வீடுகளில் இருந்த ஆண்கள், பெண்கள், வயோதிபர்கள் என அனைவர் மீதும் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவத்தையடுத்து அந்தக் கிராம மக்கள் பாதுகாப்புக் கோரி மன்னார் மாவட்ட நீதவானின் வாசஸ்தலத்திற்கு முன் ஒன்று கூடியுள்ளனர்.

சுமார் 10 இற்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களில் முக்கவசம் மற்றும் தலைக்கவசங்களை அணிந்தவாறு கிராமத்திற்குள் நுழைத்து இவ்வாறாக அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் கிராமத்தில் சிலர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது அச்சமடைந்த கிராம மக்கள் ஒன்று சேர்ந்து இரவு 8 மணியளவில் மன்னார் மாவட்ட நீதவானின் வாசஸ்தலத்திற்கு முன் ஒன்று கூடி தமக்கு உரிய பாதுகாப்பை வழங்குமாறும்,குறித்த நபர்களை கைது செய்யுமாறும் கோரிக்கை விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மன்னார் பொலிஸார் பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறைப்பாட்டை பதிவுசெய்யுமாறு அங்கிருந்தவர்களை கோரியதையடுத்து பொலிஸ் நிலையத்திற்குச் சென்று மக்கள் முறைப்பாட்டை மேற்கொண்டனர்.

அண்மையில் இளைஞர் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து பொலிஸார் சிலரை கைது செய்து பிணையில் விடுவித்துள்ளனர்.

இந்த நிலையிலே குறித்த இளைஞர் குழு நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு சாவட்கட்டு கிராமத்திற்குள் சென்று தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிய வருகின்றது.
மேலதிக விசாரனைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்