October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்: இலங்கையின் இன்றைய நிலவரம்

File Photo: Twitter/ Srilanka red cross

இலங்கையில் இன்றைய தினத்தில் 724 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 57,587 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்தவர்களில் 644 பேர் இன்றைய தினத்தில் குணமடைந்துள்ளதாக கொவிட் தடுப்புக்கான செயலணி தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து இதுவரை 49,261 பேர் குணமடைந்துள்ளதுடன், 8,046 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

2 மரணங்கள் பதிவு

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று பதிவாகிய உயிரிழப்புகளுக்கமைய நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 280 ஆக உயர்வடைந்துள்ளது.

அனைத்து மாவட்டங்களிலும் தொற்றாளர்கள்

நாட்டில் நாளாந்தம் 25 மாவட்டங்களிலும் கொரோனா தொற்றாளர்கள் பதிவாகும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனை பேராபத்து நிலைமைக்கான எச்சரிக்கையாகவே பார்க்க வேண்டுமென்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதனால் அனைத்து மாவட்டங்களிலும் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த முறையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.