இலங்கையில் கண்டி – புவெலிகட பகுதியில் நேற்று இடிந்து விழுந்து மூன்று உயிர்களை பலியெடுத்த 5 மாடிக் கட்டடம் விதி முறைகளை மீறி நிர்மானிக்கப்பட்டது என்று தெரியவந்துள்ளது.
புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள குறித்த கட்டடம் நேற்று அதிகாலை இடிந்து அருகில் உள்ள வீட்டின் மீது விழுந்தது.இதன்போது, அந்த வீட்டின் இடிபாடுகளுக்குள் சிக்கி ஒன்றரை மாதக் குழந்தையும் அந்த குழந்தையின் 32 வயது தாயும் , 35 வயது தந்தையும் உயிரிழந்திருந்தனர்.
இந்நிலையில் குறித்த கட்டடம் தொடர்பாக ஆய்வுகளை நடத்தியுள்ள கட்டட ஆராய்ச்சி நிறுவன அதிகாரிகள், அந்த கட்டடம் விதி முறைகளை மீறி அமைக்கப்பட்டது என்பதனை கண்டுபிடித்துள்ளனர். அதன் அத்திவாரம் முதல் அனைத்து விடயங்களும் விதி முறைகளை மீறியே அமைக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
கட்டடங்களை அமைக்கும் போது கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆலோசனைகளை பின்பற்ற வேண்டும் என்ற போதும், இந்த கட்டடம் அவ்வாறாக ஆலோசனைகளை பின்பற்றாதே நிர்மாணிக்கப்பட்டுள்ளது.இதனாலேயே அந்தக் கட்டடம் இடிந்து விழுந்துள்ளதாக ஆய்வு நடத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.