
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைமையகம் அமைந்துள்ளது தனது பாரம்பரிய வீட்டில் என்றும் அதனை மீள ஒப்படைக்குமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் மக்கள் முன்னேற்றக் கட்சியின் செயலாளர் அருண் தம்பிமுத்து தெரிவித்துள்ளார்.
நேற்று மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் நீதிவான் இந்த உத்தரவினை வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தாம் வசித்துவந்த பாரம்பரிய வீட்டிற்குள் கடந்த 30 வருட காலமாக தமக்குச் செல்லமுடியாத நிலை இருந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் சட்ட விரோதமாக தனது பாரம்பரிய வீட்டை அபகரித்துள்ளதாக மட்டக்களப்பு நீதிமன்றில் தொடுத்திருந்த வழக்கில், தனக்கு நீதி கிடைத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில், வீட்டுக்கு விலை பேசுவதைத் தவிர்த்து, வீட்டை ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் முன்னெடுக்க வேண்டும் என்றும் அருண் தம்பிமுத்து வேண்டுகோள் விடுத்துள்ளார்.