June 12, 2025 17:05:21

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”தமிழரின் அடையாள சின்னங்களை சிதைத்து பௌத்த சின்னங்களை புகுத்த முயற்சிக்கின்றனர்”

இலங்கை அரசாங்கம் நில அபகரிப்புகளை செய்து, இது ஒரு சிங்கள பௌத்த நாடாக காட்டுவதற்குரிய முயற்சிகளை முன்னெடுத்துள்ளதாக தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தமிழர்களுடைய பாரம்பரிய நிலங்கள் பறிக்கப்படுவது மாத்திரம் அல்ல மத அடையாள சின்னங்கள் சிதைக்கப்பட்டு பௌத்த மத சின்னங்கள் புகுத்தப்படுகின்றதாக குற்றம்சாட்டினார்.

இதற்கு நிச்சயமாக எங்களுடைய தமிழர் தரப்பில் இருந்து மிகப்பெரிய அளவிலான ஒரு எதிர்ப்பு இயக்கம் இல்லாமல் இருப்பது பெரிய குறைபாடு என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் பல இடங்களை தொடர்ந்து ஆக்கிரமிப்பவர்கள் யாழ்ப்பாணம் நிலாவரையில் நேற்றையதினம் வந்து தோண்ட ஆரம்பித்து இருக்கின்றார்கள்.

இதில்  தோண்ட ஆரம்பித்த பொழுது நான்கு பேர் சீருடை அணியாத சிவிலுடையில் வந்த இராணுவத்தினர்தான் குழி வெட்டி இருக்கின்றார்கள் அவர்களுக்கு அங்கு என்ன வேலை எனவும் கேள்வியெழுப்பினார்.

அத்தோடு வெட்டப்பட்ட குழிக்குள் எதையாவது கொண்டுவந்து புதைத்தார்களோ தெரியவில்லை. இன்னும் சில காலத்தில் புத்தரோ அல்லது வேறு ஏதோவொன்று வெளிவரலாம் இதே போன்று தொன்னிலங்கையில் பல இடங்களில் இடம்பெற்றுள்ளது எனவும் சிவாஜிலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.