July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனைய விவகாரத்தில் எங்கள் மீதான குற்றசாட்டுகளை நிராகரிக்கின்றோம்”

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவிற்கோ ஜப்பானுக்கோ விற்பது குறித்து நல்லாட்சி அரசாங்கத்தில் எந்தவித உடன்படிக்கையும் மேற்கொள்ளவில்லை என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் கிழக்கு முனையத்தை அபிவிருத்தி செய்யும் உடன்படிக்கைகள் மாத்திரமே தமது ஆட்சியில் முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிழக்கு முனையம் அபிவிருத்தி செய்யப்படும் நேரத்தில் இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகளின் நிறுவனங்கள் குறுகிய கால குத்தகைக்கு முனையத்தை இயக்கும் எனவும், மாறாக நிரந்தரமாக கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை விற்கும் வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேபோல் கடந்த ஆட்சியில் அமைச்சரவையில் இதற்கான அனுமதியை பெற்றுக்கொண்டதுடன் 51 வீத உரிமம் இலங்கைக்கு இருக்கும் விதமாகவே குத்தகை தொடர்பான உடன்படிக்கை செய்துகொள்ளப்பட்டதாகவும் ரணில் சுட்டிக்காட்டினார்.

மேலும், இந்தியாவின் அதானி நிறுவனம் 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீடும் ஜப்பானின் ‘ஜய்கா’ நிறுவனம் 190 மில்லியன் அமெரிக்க டொலர்களும் முதலீடு செய்தே இந்த அபிவிருத்தியின் முதற்கட்ட வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான நிலைமையில் கிழக்கு முனையத்தை விற்பதற்கு தமது அரசாங்கம் இணங்கியதாக முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.