July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பொதுச் சுகாதார பரிசோதகர் மீது உமிழ்ந்த நபருக்கு 6 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிப்பு!

File Photo

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை நிலையத்திற்கு அழைத்துச் செல்வதற்காக வந்த பொதுச் சுகாதார பாரிசோதகரின் முகத்தில் உமிழ்ந்த நபருக்கு பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தினால் 6 வருடங்கள் கடூழிய சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

களுத்துறை மாவட்டத்தின் பண்டாரகம, அட்டுளுகம பிரதேசத்தை சேர்ந்த நபரொருவருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அட்டுளுகம பிரதேசத்தில் நடத்தப்பட்ட பிசிஆர் பரிசோதனையின் போது குறித்த நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து கடந்த டிசம்பர் 2 ஆம் திகதி அவரை சிகிச்சை நிலையத்திற்கு அழைத்துச் செல்வதற்காக பிரதேசத்திற்கு பொறுப்பான சுகாதார பரிசோதகர் அந்த பிரதேசத்திற்கு சென்றிருந்தார்.

இவ்வேளையில் தன்னை சிகிச்சை நிலையத்திற்கு அழைத்து செல்ல வந்த அதிகாரிக்கு எதிர்ப்பு வெளியிட்ட அந்த நபர், ”உங்களுக்கும் கொரோனாவை பரப்புகிறேன்” என்று கூறி சுகாதார பரிசோதகரின் முகத்தை நோக்கி உமிழ்ந்துள்ளார்.

இதனையடுத்து அந்த நபருக்கு எதிராக பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

இவர் கொவிட் தடுப்புச் சட்டத்திற்கமைய சுகாதார அதிகாரிகளின் பணிகளுக்கு இடையூறு விளைவித்தமை, சுகாதார ஒழுங்குவிதிகளை மீறியமை, அரச அதிகாரியின் உத்தரவை மதிக்காமை உள்ளிட்ட 8 குற்றச்சாட்டுகளில் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 6 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிப்பதாக இன்று நீதிமன்றத்தினால் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குற்றவாளி 10,000 ரூபா தண்டப்பணத்தை செலுத்த வேண்டுமெனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.