
ஐநாவின் ஜெனீவா கூட்டத் தொடரின்போது மனித உரிமைகள் ஆணையரினால் இலங்கை தொடர்பில் சமர்ப்பிக்கப்படவுள்ள அறிக்கை, இலங்கை அரசின் பதிலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் பெப்ரவரி- மார்ச் மாதங்களில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத் தொடரின் தொடக்கத்தில் இலங்கை மீது மிகவும் காட்டமான அறிக்கை ஒன்றை ஐநா மனித உரிமைகள் ஆணையர் மிஷேல் பச்சலேட் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
அந்த அறிக்கையின் பிரதி கிடைத்துள்ளதாகவும் விரைவில் அது குறித்த அரசின் பதில்கள் அனுப்பி வைக்கப்படும் என்றும் இலங்கை வெளியுறவு இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய உறுதிப்படுத்தியுள்ளார்.
ஐநா மனித உரிமைகள் பேரவையில் 2015 இல் கொண்டுவரப்பட்ட இலங்கை தொடர்பான பிரேரணைக்கு மைத்திரி-ரணில் தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் இணை-அனுசரணை வழங்கியது.
அதன் பின்னர் 2017, 2019 ஆம் ஆண்டுகளில் அந்தப் பிரேரணையை நிறைவேற்றுவதற்கான கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டது.
ஆனால், 2019 இல் ஆட்சிக்கு வந்த கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம், ஐநா பிரேரணைக்கு இலங்கை அரசு அளித்துவந்த அனுசரணையிலிருந்து விலகிக்கொள்வதாக அறிவித்தது.
இதனையடுத்து, இலங்கை அரசு சர்வதேச சமூகத்துக்கு அளித்த வாக்குறுதிகளை மீறியுள்ளதாக கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
இலங்கையில் தொடர்ந்தும் மனித உரிமைகள் மீறப்பட்டு வருவதாக ஐநா மனித உரிமைகள் ஆணையரும் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில் இம்முறை இலங்கை அரசுக்கு மேலும் கால அவகாசம் வழங்கக்கூடாது என்றும் மனித உரிமைகள் பேரவைக்கு அப்பால் சென்று நீதி வழங்கும் சர்வதேச குற்றவியல் நீதி விசாரணைப் பொறிமுறை அவசியம் என்றும் தமிழர் தரப்பிலிருந்து குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன.