July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”தடுப்பூசியை காட்டி அரசாங்கம் மக்களை ஏமாற்றக் கூடாது”

நாட்டில் கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு முறையான வேலைத்திட்டங்களை தயாரிக்காமல், தடுப்பூசிகளை காட்டி மக்களை ஏமாற்ற முயற்சிக்க வேண்டாம் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தை கேட்டுக்கொண்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சித் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையில் மக்கள் சுகாதார பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைக்கு முகம்கொடுத்துள்ள நிலையில் அது தொடர்பாக பாராளுமன்றத்திற்கு வெளியில் மக்களின் குரலாக ஐக்கிய தேசியக் கட்சியின் குரல் இருக்க வேண்டும் என்று அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

இதேவேளை கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு முறையான வேலைத்திட்டங்களை தயாரிக்காது தடுப்பூசி தொடர்பாக அரசாங்கம் கதைத்துக்கொண்டிருப்பதாகவும், ஆனால் தடுப்பூசியை வழங்கிய பின்னர் பிரச்சினை முடிந்துவிடும் என்று எண்ணிவிட முடியாது எனவும் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இதனால் தடுப்பூசியை காட்டி மக்களை ஏமாற்றாது, கொரோனாவை தடுப்பதற்கு முறையான வேலைத்திட்டங்களை முன்னெடுக்குமாறும், அத்துடன் தடுப்பு மருந்தை கொண்டு வருவது தொடர்பாக முன்னெடுத்துள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பான தகவல்களை நாட்டுக்கு வெளியிட வேண்டுமெனவும் அவர் அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்தார்.