June 15, 2025 9:31:08

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வடக்கு மாகாணத்தில் 2 ஆவது கொரோனா மரணம் பதிவு: இலங்கையின் இன்றைய நிலவரம்

File Photo: Twitter/ Srilanka Red cross

இலங்கையில் இன்றைய தினத்தில் 660 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை
54,410 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்தவர்களில் 744 பேர் இன்றைய தினத்தில் குணமடைந்துள்ளதாக கொவிட் தடுப்புக்கான செயலணி தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து இதுவரை 46,594 பேர் குணமடைந்துள்ளனர்.

3 மரணங்கள் பதிவு

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று பதிவாகிய உயிரிழப்புகளுக்கமைய நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 273 ஆக உயர்வடைந்துள்ளது.

வட மாகாணத்தில் 2 ஆவது மரணம் பதிவு

மன்னார் பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இது கொரோனா தொற்றால் ஏற்பட்ட மன்னார் மாவட்டத்தின் முதலாவது மரணமாகவும், வடக்கு மாகாணத்தின் 2 ஆவது மரணமாகவும் பதிவாகியுள்ளது.

மன்னார் உப்புக்குளத்தைச் சேர்ந்த 57 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இருதய நோயாளியான இவர் மன்னார் பொது வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.

அவரது மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்திய நிலையில் கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வவுனியாவில் 25 பேருக்கு தொற்று

வவுனியாவில் மேலும் 25 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதிசெய்யபட்டுள்ளது.

இதன்படி வவுனியா நகர கொரோனா கொத்தணியில் இதுவரை தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 244 ஆக உயர்வடைந்துள்ளது.