July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘பொறுப்புக்கூறும் விடயத்தைப் பயன்படுத்தி அரசியல் செய்ய வேண்டாம்’

பயங்கரவாத மரபு சார்ந்த இராணுவ வழிமுறைகள் மூலம் ஈழத்தைப் பெறுவதற்கான தங்களின் முயற்சியில் தோல்வியடைந்தவர்கள் – நாட்டை இன அடிப்படையில் பிரிப்பதில் இன்னமும் நம்பிக்கொண்டுள்ளவர்கள் சர்வதேச தலையீட்டைக் கோருகின்றனர்.

பொறுப்புக்கூறும் விடயத்தைப் பயன்படுத்தி அரசியல் செய்ய வேண்டாம் என அவர்களிடம் நாம் வேண்டுகோள் விடுக்கின்றோம் என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம தெரிவித்தார்.

ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த அவர் மேலும் தெரிவித்ததாவது:-

தமிழீழ விடுதலைப்புலிகளுடனான தங்கள் தொடர்புகள் காரணமாக களங்கப்பட்ட பலர் ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட அரசைப் பலவீனப்படுத்துவதற்காக உள்நாட்டு, வெளிநாட்டு சக்திகளின் ஆதரவைப் பெற முயல்கின்றனர். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் அமர்வுக்கு முன்னதாக ஒருங்கிணைந்த முயற்சிகள் இடம்பெறுகின்றன.

வேலுப்பிள்ளை பிரபாகரனைத் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதியாக ஏற்றுக்கொள்ளும்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விடுதலைப்புலிகள் கட்டாயப்படுத்தியமை அந்தக் கட்சி இப்போது மறந்துவிட்டது.

நந்திக்கடலில் விடுதலைப்புலிகளின் தலைவரின் தலையில் இராணுவம் துப்பாக்கி ரவையைச் செலுத்தும்வரை விடுதலைப்புலிகள் தாங்கள் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் என்பதைப் பயன்படுத்தினார்கள்.

ஜெனிவாவில் இம்முறை இலங்கை மீது புதிய பிரேரணை கொண்டுவரப்படுவது நிச்சயம் என்பதால் அரசு மேலும் தாமதிக்காமல் அது குறித்து ஆராய்வது முக்கியமானது.

இங்கிலாந்தின் நேஸ்பி பிரபு தெரிவித்துள்ள விடயங்களையும், விக்கிலீக்ஸில் வெளியாகியுள்ள விடயங்களையும் இலங்கை அரசு தனக்குச் சார்பாக வாதிடுவதற்காகப் பயன்படுத்த வேண்டும்.

அதேவேளை, தமிழ்க் கட்சிகளின் கருத்துக்களையும் சாதாரணமாகக் கருதக்கூடாது.விடுதலைப்புலிகளின் குரலாகச் செயற்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு முதல்தடவையாக இரண்டு கட்சிகளின் ஆதரவு கிடைத்துள்ளது.

2013 இல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடாக அரசியலுக்கு வந்த விக்னேஸ்வரன் அந்தக் கட்சியிலிருந்து விலகியுள்ள போதிலும் அவர் ஜெனிவா குறித்த பொது நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடனும் இணைந்து செயற்படுகின்றார்.

இம்முறை ஜெனிவா அமர்வு இலங்கைக்குப் பெரும் சவாலாகக் காணப்படப்போகின்றது. இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறலை விட மேற்குலக நாடுகளின் உண்மையான நலன்களும் நோக்கங்களும் பரந்துபட்டவை என்று அவர் மேலும் தெரிவித்தார்.