July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சிறைச்சாலை அத்தியட்சரின் உறுதிமொழியை அடுத்து போராட்டத்தை கைவிட்டார் அரசியல் கைதி தேவதாசன்

உணவு தவிர்ப்பு போராட்டத்தில் கடந்த 10 நாட்களாக ஈடுபட்டிருந்த அரசியல் கைதியான தேவதாசன் சிறைச்சாலை அத்தியட்சரின் உறுதிமொழியை அடுத்து இன்று முதல் 3 வாரங்களுக்கு தனது போராட்டத்தை இடைநிறுத்தியுள்ளார்.

மேன்முறையீட்டு வழக்குகள் இரண்டும் துரித விசாரணைக்கு உட்படுத்தப்படாதுவிடின் பிணை அனுமதி வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்துள்ளார்.

மேன்முறையீட்டு வழக்குகளில் துரித விசாரணை சாத்தியமில்லையாயின், பிணை அனுமதி பெற ஆவண செய்து தருமாறு கோரி புதிய மகசின் சிறைச்சாலையில் உள்ள அரசியல் கைதியான இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பணிப்பாளர் சபை உறுப்பினர் கனகசபை தேவதாசன் (வயது 64)கடந்த 06.01.2021 முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.

அவருடைய உடல் நிலை கவலைக்கிடமான நிலையில் இன்று 16 01.2021 முற்பகல் 10 மணிக்கு சிறை அத்தியட்சகர் மற்றும் உதவி அத்தியட்சகருக்கும் தேவதாசனுக்கும் இடையில் மொழிபெயர்ப்பு உதவியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

அதன்போது சில முடிவுகள் எட்டப்பட்டது. அதாவது ஏற்கனவே இந்த விடயமாக மேன்முறையீட்டு நீதிமன்றுக்கு அனுப்பியுள்ள கடிதத்தின் தொடர்ச்சியாக நாளை மறுதினம் 18.01.2021 திகதியன்று மேன்முறையீட்டு மன்றுக்கு நேரடியாகச் சென்று தேவதாசனின் கோரிக்கை மீதான உரிய நடவடிக்கையை உடனே எடுக்குமாறு கேட்பதாகவும், மன்று இதற்கு தாமதம் செய்யுமாயின் அடுத்துவரும் 3 வாரங்களுக்கு சட்டமா அதிபர் அலுவலகத்துடன் தொடர்புகொண்டு அவருடைய கோரிக்கை மீதான உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்பதாகவும் இதனை சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு தெரிவிக்கவுள்ளதாகவும் இவை எதுவும் நடைபெறவில்லையெனில் உண்ணாவிரதத்தை மீண்டும் தொடருவது எனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

சிறை அத்தியட்சகர் உறுதியளித்ததன் காரணமாக அதை ஏற்று தனது உணவு தவிர்ப்பு போராட்டத்தை 3 வாரங்களுக்கு அவர் இடைநிறுத்தியுள்ளதாக தேவதாசனின் உறவுகள் குரலற்றவர்களின் குரல் அமைப்புக்கு தெரிவித்துள்ளனர்.