June 14, 2025 22:48:44

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அமைச்சர் ஜோன்ஸ்டனுக்கு எதிரான வழக்கு சட்டத்திற்கு முரணானது என்று கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பு

அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணாண்டோவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு சட்டத்திற்கு முரணானது என்று கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

2015 ஆண்டுக்கு முன்னரான ராஜபக்‌ஷ அரசாங்கத்தின் போது வர்த்தக அமைச்சராக பதவி வகித்த ஜோன்ஸ்டன் பெர்ணாண்டோ, சதொச நிறுவனத்தின் 153 ஊழியர்களை பணி நீக்கி அவர்களை அரசியல் செயற்பாடுகளில் ஈடுப்படுத்தியதன் ஊடாக, அரசாங்கத்திற்கு நான்கரை கோடி ரூபா நட்டத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் மீது இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தது.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது, இந்த வழக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், அந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள விதம் சட்டத்திற்கு முரணானது என தெரிவித்து அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ, அடிப்படை எதிர்ப்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தார்.

குறித்த மனுவை கொழும்பு நீதவான் நீதிமன்றம் நிராகரித்திருந்த நிலையில், இதற்கு எதிராக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணாண்டோ கொழும்பு மேல் நீதிமன்றத்தில் எதிர்ப்பு மனுவை தாக்கல் செய்திருந்தார்.

அவரின் எதிர்ப்பு மனுவை விசாரித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு சட்டத்திற்கு முரணானது என தீர்ப்பளித்துள்ளது.

இதன்படி குறித்த வழக்கை இதற்கு மேல் தொடர முடியாது என்றும் அறிவித்துள்ளது.