July 2, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘ஜனாதிபதி பதவிக்கு கோட்டாபய ராஜபக்ச பொருத்தமற்றவர்’

அரசியல்வாதி என்பவர் விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளக் கூடியவராக இருக்க வேண்டும். அரசியல் விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள முடியாத ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அந்தப் பதவியை வகிப்பதற்குப் பொருத்தமற்றவர் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஷோக அபேசிங்க தெரிவித்தார்.

நாட்டின் சமகால அரசியல் நிலைமை தொடர்பில் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

ஜனவரி 13 ஆம் திகதி 69 இலட்சம் மக்களுக்கு முக்கியத்துவமுடையதொரு நாளாகும். அறந்தலாவ பௌத்த பிக்குகள் கொல்லப்பட்டமை, மங்களகம கிராமத்தில் சிங்கள மக்கள் கொல்லப்பட்டமை என்பவற்றுடன் தொடர்புடைய பிள்ளையான் விடுதலை செய்யப்பட்டுள்ளமையே இதற்கான காரணமாகும்.

69 இலட்சம் மக்கள் எதிர்பார்த்த மாற்றம் இதன் மூலம் ஏற்பட்டுள்ளது. இதே சந்தர்ப்பத்தில் பல உண்மைகளை வெளிப்படுத்திய ரஞ்சன் ராமநாயக்க சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தேசிய சொத்துக்கள் ஒருபோதும் வெளிநாடுகளுக்கு விற்கப்பட மாட்டாது என்று உறுதியளித்து ஆட்சியைக் கைப்பற்றிய ஜனாதிபதி நந்தசேன கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோர் தற்போது வழங்கிய வாக்குறுதிகளை மறந்து அனைத்துச் சொத்துக்களையும் அந்நியர்களுக்கு விற்று கொண்டிருக்கின்றனர்.

சர்வதேச மட்டத்தில் 23 ஆவது இடத்தில் காணப்படும் கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையம் அபிவிருத்தி செய்யப்பட்டால் அது 15 அல்லது 16 ஆவது இடத்துக்கு முன்னேறக் கூடும்.

ஆனால், மிகக் குறைந்த வருமானத்துக்கு இந்திய நிறுவனத்துக்கு இதனை வழங்க முற்படுகின்றமை பொருத்தமற்றது. இவ்வாறான செயற்பாடுகளின் காரணமாக பௌத்த தேரர்கள் உள்ளிட்ட பலரும் அரசின் மீது அதிருப்தியடைந்துள்ளனர்.

எமது ஆட்சியின்போது குத்தகைக்கு வழங்கும்போது அதற்கு விற்கப்படுகின்றது என்று பெயர் சூட்டினார்கள். ஆனால், தற்போது அதற்கு முதலீடு என்று பெயர் சூட்டுகின்றார்கள்.

ஐக்கிய மக்கள் சக்தி என்ற அடிப்படையில் நாம் மக்களுடன் ஒன்றிணைந்து கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தைப் பாதுகாக்கத் தொடர்ந்தும் போராடுவோம்.

பி.சி.ஆர். பரிசோதனைகளின் அளவு குறைவடைந்து செல்கின்ற அதேவேளை மறுபுறம் தொற்று தீவிரமாகப் பரவலடையக் கூடும். மினுவாங்கொடை கொத்தணி உருவாகியதற்கான காரணமாக உக்ரேனிலிருந்து வந்த பிரஜைகள் என்று கூறப்பட்டது.

ஆனால், தற்போது சலுகைகளுடன் அந்த நாட்டிலிருந்து நூற்றுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வரவழைக்கப்படுகின்றனர்.

இதன் மூலம் அரசு எதிர்பார்ப்பது என்ன? கொரோனாத் தொற்றால் தொழில்வாய்ப்பை இழந்துள்ளவர்களுக்காக அரசில் எந்தவொரு வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்படவில்லை. பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளமாக வழங்குவதாகக் கூறி அந்த மக்களையும் அரசு தொடர்ச்சியாக ஏமாற்றி வருகின்றது.

இரு பக்கங்களைக் கொண்ட ஜனாதிபதி நந்தசேன கோட்டாபய ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளார். அவரது இந்தச் செயற்பாடுகள் பற்றி நாம் சபாநாயகருக்கு தெளிவுபடுத்தவுள்ளோம்.

அரசியல்வாதி என்பவர் விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளக் கூடியவராக இருக்க வேண்டும். அரசியல் விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள முடியாத ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அந்தப் பதவியை வகிப்பதற்குப் பொருத்தமற்றவர்.

எவ்வித பலமும் இன்றி அதிகாரத்துக்கு வந்த ராஜபக்சாக்கள் தற்போது ஆசியாவில் முன்னணி தனவந்தர்களானது ஊழல், மோசடிகள் ஊடாகவே என்பதை மக்கள் உணர வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.