July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பாராளுமன்றத்தில் ஆளும்கட்சி அலுவலகத்திற்கு பூட்டு

இலங்கை பாராளுமன்றத்தின் ஆளும் கட்சி பிரதம கொரடாவின் செயலாளரும், பிரதமரின் மேலதிக செயலாளருமான சட்டத்தரணி சமிந்த குலரட்னவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் பாராளுமன்றத்திலுள்ள ஆளும் கட்சி அலுவலகமும், உறுப்பினர்களுக்கு சேவை வழங்கும் அலுவலகமும் மூடப்பட்டுள்ளன.

பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவருக்கும், பிரதமரின் அரசியல் விவகாரங்களுக்கு பொறுப்பான செயலாளருக்கும் ஏற்கனவே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், நேற்றைய தினத்தில் ஆளும் கட்சி பிரதம கொரடாவின் செயலாளருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

இதனையடுத்து ஆளும் கட்சி பிரதம கொரடாவின் செயலாளருடன் தொடர்புடைய அலுவலகங்களை மூடுவதற்கு நடவடிக்கையெடுத்துள்ள பாராளுமன்ற அதிகாரிகள், அந்த அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்களை தனிமைப்படுத்தவும் நடவடிக்கையெடுத்துள்ளனர்.

இந்நிலையில் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று நடைபெறவிருந்த கட்சித் தலைவர்களின் கூட்டமும் எதிர்வரும் 18 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நேற்றைய தினத்தில் பாராளுமன்றத்தில் 400 பேருக்கு பிசிஆர் பரிசோதனைகள் செய்யப்பட்டதுடன், அதன் முடிவுகள் இன்று மாலை வெளியாகவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.