October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘நீதித்துறை என்னை வெள்ளைப் பேப்பரால் கழுவி விடுதலை செய்திருக்கிறது’

இலங்கையின் நீதித்துறை இன்று தன்னை வெள்ளைப் பேப்பரால் கழுவி விடுதலை செய்துள்ளதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

இன்று மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்துக்கு முட்டுக்கொடுத்தவர்களே திட்டமிட்டு தன்னை சிறையில் தள்ளியதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

நாட்டில் பயங்கரவாத தடைச் சட்டத்தை உருவாக்கியவர்கள் தன்னை மட்டும் அதில் தண்டிக்க வேண்டும் என்றும் மற்றவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றும் இரட்டை முகம் காட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

‘நீதிமன்றம் இந்த வழக்கில் பிள்ளையானுக்கு எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்று, அழகாக என்னை கழுவி விடுதலை செய்திருக்கிறது. ஆகையால் நீதித்துறைக்கும் என்னுடைய விடுதலைக்காக போராடிய சட்டத்துறையினருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்றும் பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

தான் இந்த வழக்கு சம்பந்தமாக ஜனாதிபதியையோ, பிரதமரையோ சந்திக்கவில்லை என்றும் தான் அரசியல் ரீதியாகப் பழிவாங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.