July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கில் இருந்து பிள்ளையான் விடுதலை

Photo: Facebook/ sivanesathurai chandrakanthan

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கில் இருந்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ‘பிள்ளையான்’ என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்ட ஐந்து பேரை, மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

குறித்த வழக்கைத் தொடர்ந்தும் நடத்துவதில்லை என்று சட்டமா அதிபர் திணைக்களம், மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்துக்கு அறிவித்திருந்த நிலையில், அது தொடர்பாக இன்று நீதிமன்றத்தினால் தீர்ப்பளிக்கப்பட்டது.

இதன்போது வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த 5 பேரையும் அதிலிருந்து விடுவிப்பதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் 2005 டிசம்பர் மாதம் 25 ஆம் திகதி மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் படுகொலை செய்யப்பட்டதோடு, அவரது மனைவி உட்பட பொதுமக்கள் 7 பேரும் காயமடைந்திருந்தனர்.

சம்பவம் தொடர்பாக சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட ஐவர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இதேநேரம், சட்டமா அதிபரின் ஒப்புதலைத் தொடர்ந்து கடந்த நவம்பர் மாதம் மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு பிணை வழங்கியது.

இந்நிலையில் கடந்த 11 ஆம் திகதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் ஆஜராகிய அதிகாரிகள், ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பான வழக்கைத் தொடர்ந்தும் நடத்துவதில்லை என்று தீர்மானித்துள்ளதாக நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தனர்.

இதனடிப்படையில், அந்த வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிப்பட்டது.