July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சுகாதார உத்தியோகத்தரை போன்று வீட்டுக்குள் புகுந்து கொள்ளையில் ஈடுபட்ட பெண் மடக்கிப் பிடிப்பு

தான் சுகாதாரப் பிரிவைச் சேர்ந்தவர் எனவும், வீடுகளுக்குள் சோதனையிட வேண்டுமெனவும் கூறி வீடொன்றுக்குள் புகுந்து கொள்ளையில் ஈடுபட்ட பெண்ணொருவர் பிரதேசவாசிகளினால் மடக்கிப் பிடிக்கப்பட்ட சம்பவமொன்று யாழ்ப்பாணம், வடமராட்சி பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது.

வீடுகளுக்குள் பார்க்க வேண்டும் எனத் தெரிவித்து வீட்டின் உள்ளே சென்று, வீட்டில் தனியே இருந்த பெண்ணொருவரின் தாலிக் கொடியை அறுத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் குறித்த பெண் தப்பிச் சென்றுள்ளார்.

இதன்போது வீட்டில் இருந்த பெண் கூக்குரல் எழுப்பியதை அடுத்து அயலவர்கள் துரத்திச் சென்று கொள்ளையில் ஈடுபட்ட பெண்ணை பலாலி, அன்ரனிபுரத்தில் வைத்து மடக்கிப் பிடித்து, பலாலிப் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

குறித்த கொள்ளைச் சம்பவம் வல்வெட்டித்துறைப் பொலிஸ் பிரிவில் இடம்பெற்றதால் அந்தப் பெண் வல்வெட்டித்துறைப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.