
2019 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் வெட்டுப் புள்ளிகளில் ஏற்பட்ட சிக்கலில் அநீதியிழைக்கப்பட்ட மாணவர்களுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்று கோரி பிரதமரின் உத்தியோகப்பூர்வ வீட்டுக்கு முன்னால் இன்று ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.
ஆர்ப்பாட்டத்தில் ஏற்பட்ட பதட்ட நிலையைத் தொடர்ந்து, அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் ரத்கரவ்வே ஜனரதன தேரர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கடந்த வருடம் உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளின் வெட்டுப் புள்ளிகளில் சிக்கல்கள் ஏற்பட்டதாகவும், அதன் காரணமாக அதிகமான மாணவ, மாணவிகள் பல்கலைக்கழக வாய்ப்பை இழந்துள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மாணவர்களின் இந்தப் பிரச்சினையைக் காரணம் காட்டி ஆட்சிக்கு வந்தவர்கள், இப்போது பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதில் பின்னிற்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.
அநீதியிழைக்கப்பட்ட மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.