October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் அநியாயமாக தொழிலை இழப்போருக்கான நஷ்டஈட்டுத் தொகை 25 இலட்சம் ரூபா வரை அதிகரிப்பு

இலங்கையில் ஊழியர்கள் அநியாயமாக தொழிலை இழக்கும் போது வழங்கப்படும் ஆகக் கூடிய நஷ்டஈட்டுத் தொகையை 25 இலட்சம் ரூபா வரையில் அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பாக தொழில் உறவுகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சிவ்வாவினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நிறுவனங்கள் மூடப்படுவதால் ஊழியர்கள் தொழிலை இழக்கும் போதும், நியாயமற்ற வகையில் தொழிலாளர்கள் பணியிலிருந்து நீக்கப்படும் போதும் அவர்களுக்கு வழங்கப்படும் ஆகக் கூடிய நஷ்டஈட்டுத் தொகையையே இவ்வாறு அதிகரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

2003 ஆம் ஆண்டு 12 ஆம் இலக்க சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ள 1971 ஆம் ஆண்டு 45 ஆம் இலக்க தொழிலாளர்களின் தொழில் முடிவுறுத்தல் (விசேட ஏற்பாடுகள்) சட்டம் தொழிலாளர்களின் சேவையை முடிவுறுத்தும் போது சலுகை வழங்கும் நோக்கில் கொண்டுவரப்பட்டதாகும் என்பது அமைச்சரவையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறித்த சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய தொழிலாளர்களின் சேவையை முடிவுறுத்தும் போது அவர்களுக்கு செலுத்த வேண்டிய நஷ்ட ஈட்டுத் தொகை தீர்மானிப்பதற்கான சூத்திரமொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய தொழிலாளர்கள் பணிபுரிந்த காலத்தை கருத்திற்கொண்டு நஷ்ட ஈட்டுத் தொகை தீர்மானிக்கப்படவுள்ளது.

எனவே, தற்போது உயர்ந்தபட்ச நஷ்ட ஈட்டுத் தொகையாக உள்ள 12 இலட்சத்து 50 ஆயிரத்தை 25 இலட்சம் வரையில் அதிகரிக்க தொழில் உறவுகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.