July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘யாழ். பல்கலை நினைவுச் சின்னத்தை அகற்றியதும் மீளமைக்க நடவடிக்கை எடுத்ததும் உபவேந்தரே’

யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் அகற்றப்பட்ட விடயத்தில் அரசாங்கத்துக்கு எவ்விதத் தொடர்பும் இல்லை என்று இணை அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் கடந்த வெள்ளிக்கிழமை தகர்க்கப்பட்டதன் பின்னர் எழுந்த சர்ச்சைகளுக்கு அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் தெரிவிக்கும் போதே, அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுச் சின்னத்தை அகற்ற பல்கலைக்கழக உபவேந்தரே தீர்மானித்ததாகவும், அதனை மீள அமைக்க நடவடிக்கை எடுத்ததும் உபவேந்தர் உள்ளிட்ட அதிகாரிகளே என்பதையும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், இது குறித்து அரசாங்கம் எந்த சந்தர்ப்பத்திலும் கொள்கை ரீதியில் தீர்மானம் எடுக்கவில்லை எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக வளாகத்தில் ஏதேனும் ஒன்று தேவையா, இல்லையா என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் பல்கலைக்கழக உபவேந்தர் உள்ளிட்ட நிர்வாகக் குழுவுக்குள்ளதே தவிர அது தொடர்பில் அரசாங்கமோ, அமைச்சர்களோ தீர்மானம் எடுக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதற்கமையவே, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக உபவேந்தர் தீர்மானம் எடுத்துள்ளார் என்பதையும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.