July 2, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிப்பு!

Photo: Facebook/ Ranjan Ramanayake

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நீதிபதிகள் ஊழல்வாதிகள் என்று ரஞ்சன் ராமநாயக்க நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் வெளியிட்டிருந்த கருத்தை அடிப்படையாக கொண்டு நடத்தப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்ட போதே அவருக்கு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

2017 ஆம் ஆண்டில் கொழும்பு அலரிமாளிகையில் அப்போதிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடனான கலந்துரையாடலொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது, நாட்டில் பெரும்பான்மையான நீதிபதிகளும், சட்டத்தரணிகளும் ஊழல்வாதிகள் என்று ரஞ்சன் ராமநாயக்க குறிப்பிட்டிருந்தார்.

இவரின் இந்த கருத்து நாட்டின் நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையை சீர்குலைக்கும் செயற்பாடு என்றும், இதன்மூலம் நீதிமன்றம் அவமதிக்கப்படுவதாகவும் தெரிவித்து, ஓய்வுப் பெற்ற விமானப்படை அதிகாரியான சுனில் பெரேரா என்பவரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அந்த வழக்கின் விசாரணைகள் கடந்த மூன்று வருடங்களாக நடைபெற்ற நிலையில் அதன் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.