June 12, 2025 23:01:28

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தமிழ் மொழியை விசேட தகைமையாகக் கருதி 150 சட்டத்தரணிகளை பொலிஸ் சேவையில் இணைத்துக்கொள்ளத் தீர்மானம்

இலங்கை பொலிஸ் சேவையில் 150 சட்டத்தரணிகளை இணைத்துக்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பொது மக்களுக்கு சட்டம் மற்றும் பொலிஸாரின் சேவைகளை விரிவுபடுத்தும் நோக்கில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும், இவ்விடயத்தில் தமிழ் மொழி அறிவு விசேட தகைமையாகக் கருதப்படும் என்றும் நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நீதி அமைச்சர் மொஹமட் அலி சப்ரி முன்வைத்த இந்த யோசனைக்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதாகவும், இதுதொடர்பாக அமைச்சரவையில் தீர்மானிக்கப்படும் என்றும் நீதிஅமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை பொலிஸ் சேவையில் பிரதான பொலிஸ் பரிசோதகர்களாகவே 150 சட்டத்தரணிகள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாகவும், அதற்கான நேர்முகப் பரீட்சைகள் நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு இணைத்துக்கொள்ளப்படுவோருக்கு பிரதான பொலிஸ் பரிசோதகர் பதவியில் இருந்து, அவர்களது திறமைகளுக்கேற்ப பதவி உயர்வுகள் வழங்கப்படும் என்றும் நீதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.