July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘8 ஆண்டுகளிற்கு பிறகு ஜெனிவாவில் ஒருமித்து குரல் எழுப்புவதற்கான வாய்ப்பு ஏற்பட்டிருக்கின்றது’

கடந்த 8 ஆண்டுகளிற்கு பிறகு மனித உரிமை விவகாரத்தில் ஒரு புள்ளியில் களத்திலிருந்து ஒருமித்து குரல் எழுப்புவதற்கான வாய்ப்பு ஏற்பட்டிருக்கின்றது என தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இடம்பெற்ற ”ஜெனீவாவிற்கு அப்பால்” எனும் மூன்றாவது கலந்துரையாடலின் நிறைவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஜெனிவாவிற்கு அப்பால் என்கின்ற எமது மூன்றாவது கலந்துரையாடல் நீண்ட வாத பிரதிவாதங்களிற்கு மத்தியில் ஓர் இணக்கப்பாட்டை எட்டியிருக்கின்றோம் என்பது மகிழ்ச்சியான விடயம். கடந்த பல ஆண்டுகளாக கோட்பாடு ரீதியாக ஒருமித்த கொள்கையுடைய தமிழ்க் கட்சிகளும், வடக்கு, கிழக்கு சிவில் சமூகங்களும் ஒருங்கிணைந்து ஒரு புள்ளியில் செயலாற்ற வேண்டும் என்கின்ற பல கூட்டங்களும், பல முயற்சிகளும், பல சந்திப்புகளும் இன்றைய நாளிலே வெற்றி பெற்றிருக்கிறது.

ஒரு புள்ளிக்கு வருவதற்கு ஒத்துழைத்த அத்தனை பேருக்கும் நாங்கள் நன்றி சொல்கின்றோம். பிரதானமாக மூன்று அரசியல் கட்சிகளிற்கும் நாங்கள் நன்றி சொல்கின்றோம். மேலும் திருமலை மாவட்ட ஆயர், மத குருமார், சிவில் அமைப்புக்கள், கருத்தியலாளர்கள் அனைவருக்கும் ஏற்பாட்டாளர்கள் என்ற வகையில் நன்றி கூறுகின்றோம். கடந்த 8 ஆண்டுகளிற்கு பிறகு மனித உரிமை விவகாரத்தில் ஒரு புள்ளியில் களத்திலிருந்து ஒருமித்து குரல் எழுப்புவதற்கான வாய்ப்பு ஏற்பட்டிருக்கின்றது.

தமிழ் மக்களினுடைய இவ்வாறான பிணக்குகளில் மூன்று கட்சிகளும் ஒருமித்த நிலையில் ஒரு புள்ளியில் செயலாற்ற வேண்டும் எனவும், இவ்வாறான விடயங்களிற்கு அனைவரும் ஒருமித்த ஒரு நிலைப்பாட்டுக்கு வருவதென்பது சாதாரண விடயமல்ல எனவும் அவர் குறிப்பிட்டார்.