![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2021/01/maniwanann.jpg?fit=1000%2C704&ssl=1)
யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்கால் நினைவுச் சின்னம் இடித்தழிக்கப்பட்டமையானது ஒரு கோழைத்தனமான செயற்பாடு என யாழ் மாநகர சபை மேயர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
மேலும், இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது கொல்லப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொது மக்களை நினைவுகூரும் வகையில் அமைக்கப்பட்ட குறித்த நினைவுச் சின்னமானது இரவோடு இரவாக இடித்து அழிக்கப்பட்டமையானது அனைத்து தமிழ் உணர்வாளர்களையும் சீண்டும் செயல் என அவர் தனது கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
எனவே இந்த செயற்பாட்டினை வன்மையாகக் கண்டிப்பதாகவும், இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் உயிரிழந்த தமது உறவுகளைக் கூட நினைவு கூர முடியாத அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும், இது ஏற்றுக்கொள்ளப்பட முடியாத அடிப்படை உரிமை மீறல் எனவும் கண்டன அறிக்கையில் யாழ் மாநகர சபை மேயர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் குறிப்பிட்டுள்ளார்.