July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“நேர்மையாக மக்களுக்கு சேவையாற்றும் அரச அதிகாரிகள் தண்டிக்கப்படாத வகையில் பாதுகாப்பளிப்போம்”

நேர்மையுடன் மக்களுக்கு சேவையாற்றும் அரச அதிகாரிகள் தண்டிக்கப்படாத வகையில் அரசியலமைப்பு ரீதியில் முழுமையான பாதுகாப்பை வழங்குவதற்கு எதிர்பார்ப்பதாக பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பு அலரிமாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையில் நடைபெற்ற ‘கிராமத்துடன் கலந்துரையாடல்  செயற்றிட்டத்துடன் மீண்டும் கிராமத்திற்கு’ என்ற அரசாங்கத்தின் வேலைத்திட்டம் தொடர்பில் அதிகாரிகளைத் தெளிவுபடுத்தும்  நிகழ்விலேயே பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார்.

தேர்தலை எதிர்பார்த்து எவ்விடயமும் இந்தவருட வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்படவில்லை. நாம் மக்களுக்கு அவ்வாறான மோசடிகளை செய்யமாட்டோம் என்பதை நாம் ஏற்கனவே கூறியிருக்கின்றோம் என்று இதன்போது பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இனிவரும் காலங்களிலும் அவ்வாறு செய்யப்போவதில்லை. இந்த வரவு செலவுத் திட்டம் கிராம விவசாயிகள், மீனவர்கள், தொழிலதிபர்கள் ஆகியோரை மேம்படுத்துவதற்கே ஒதுக்கப்பட்டுள்ளது.

கிராமத்துடன் கலந்துரையாடல் வேலைத்திட்டத்தை முன்னெடுத்து செல்லும்போது மக்களின் தேவை எமக்கு புலப்படும். புத்தகத்தில் உள்ளவற்றிற்கும், நிர்வாக விதிமுறைகள், நிதி விதிமுறைகளில் உள்ளவற்றிற்கும், மக்கள் கோருகின்றவைக்கும் இடையே பாரிய இடைவெளி உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவற்றை மக்களின் தேவைக்கு ஏற்றவகையில் கையாண்டு பணியாற்றும் சவாலே அதிகாரிகளுக்கு உள்ளது. இதன்படி நேர்மையுடன் மக்களுக்கு சேவையாற்றும் அரச அதிகாரிகள் தண்டிக்கப்படாத வகையில் அரசியலமைப்பு ரீதியில் முழுமையான பாதுகாப்பை வழங்குவோம் என்று பிரதமர் கூறியுள்ளார்.

இந்த கலந்துரையாடலின் போது, பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பு ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில்ராஜபக்‌ஷவும்  கலந்துகொண்டிருந்தார்.