October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘நிபுணர் குழுவின் அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பியுங்கள்’

நிபுணர் குழுவின் அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவும் என நாடாளுமன்ற உறுப்பினர்  இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

முஸ்லிம்களின் ஜனாஸா தொடர்பாக நாளுக்கொரு தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கிறது .ஜனாஸாவை அடக்கம் செய்ய வறண்ட நிலம் ஒன்றைத் தேடுமாறு ஜனாதிபதி கூறியதாகக் கூறி இடமும் அடையாளம் காணப்பட்டதாக கடந்த மாதம் செய்தி வெளியிட்டனர்.

ஒரு மாதத்துக்கு முன் அடையாளம் காணப்பட்ட இடத்தை மீண்டும் தேடுமாறு பிரதமர் கூறியதாக சில வாரங்களுக்கு முன்னர் கூறப்பட்டது.மாலைதீவில் அடக்கம் செய்யத் தீவொன்றை ஒதுக்கியுள்ளதாகச் செய்தி வெளியிடப்பட்டது.

ஜனாஸாக்களை எரிக்கப் பெட்டிகளுக்கு மக்களிடம் இருந்தே பணம் அறவிடும் அரசாங்கம் ஜனாஸாக்களை மாலைதீவுக்கு கொண்டு சென்று அடக்கம் செய்யுமா?

இந்த நாட்டு அரசுக்கு வரி செலுத்தி இங்கு இவ்வளவு காலமும் இலங்கையர்களாக வாழ்ந்தவர்களை வெளிநாடொன்றில் அடக்கம் செய்வது அவர்களின் இன்னொரு அடிப்படையுரிமை மீறல்.இவ்வாறாக மாறுபட்ட கருத்துக்கள் தெரிவித்து வந்த நிலையில் சுகாதாரத் துறையே இறுதி தீர்மானம் மேற்கொள்ளும், அவர்களின் வழிகாட்டலுக்கு அமைவாகவே அரசாங்கம் தீர்மானிக்கும் எனத் தெரிவித்து நிபுணர் குழுவொன்றை நியமித்தது.

அந்த குழுவும் தனது இறுதி அறிக்கையைச் சமர்ப்பித்து அதில் அடக்கம் செய்யவும் முடியும் எரிக்கவும் முடியும் எனக் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இப்பொழுது அரசாங்கத்தில் உள்ள சில உறுப்பினர்கள், இது தொடர்பாக அரசுதான் இறுதி முடிவெடுக்கும் சுகாதாரத் துறையல்ல எனக் கூறுகின்றனர்.

ஆகவே யார் சொன்னாலும் நாங்கள் எரிக்கும் நிலைப்பாட்டில்தான் இருப்போம் என்ற அரசின் நிலைப்பாடே இந்த மாறுபட்ட கருத்துக்களிலிருந்து தெளிவாகிறது.

ஆகவே சுகாதார துறை நிபுணர் குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதை இச்சபைக்கு அறிவிக்க வேண்டும்.
ஜனாஸாக்களை எரிப்பதுதான் இறுதி முடிவு என சுகாதார அமைச்சர் தெரிவித்த பின், அரசாங்கத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைப் பெற்றுக்கொடுத்த, இருபதுக்கு ஆதரவு தெரிவித்த முஸ்லிம் உறுப்பினர்களின் நிலைப்பாடு என்ன?

எங்களுக்கு அபிவிருத்திதான் வேண்டும்.தொடர்ந்தும் அரசாங்கத்துடன்தான் இருப்போம் என்றால் உங்களின் நிலைப்பாட்டை மக்கள் முன் தெரிவிக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.