July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“துறைமுகத்தை சர்வதேச நிறுவனங்களுக்கு கொடுக்கவே அரசாங்கம் முயற்சிக்கின்றது“ ஜே.வி.பி குற்றச்சாட்டு

புதிய உடன்படிக்கை ஒன்றினை நடைமுறைப்படுத்தி அதன் மூலம் துறைமுகத்தை சர்வதேச நிறுவனங்களுக்கு கொடுக்கவே அரசாங்கம் முயற்சித்து வருவதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க குற்றம் சுமத்தினார்.

இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

கொழும்பு கிழக்கு முனையத்தின் பங்குகளில்  49 வீதம் துறைமுக அதிகார சபைக்கும்  51 வீதம் இந்திய நிறுவனத்திற்கும் கொடுக்கும் முயற்சிகளை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக அவர் தெரிவித்தார்.

முன்னைய அரசாங்கம், கொழும்பு கிழக்கு முனைய அபிவிருத்தி என்ற பெயரில் செய்து கொண்ட  உடன்படிக்கைக்கு அமைய துறைமுக அதிகார சபை இந்திய, ஜப்பான் நிறுவனகளுடன் ஒன்றிணைந்து கட்டியெழுப்பும் நிறுவனத்திற்கு குறைந்த வட்டியில் ஜப்பானிடம் இருந்து கடன் கிடைக்கும் எனவும் கூறப்பட்டதாக அனுரகுமார திசாநாயக்க மேலும் தெரிவித்தார்.

ஆனால் தற்போது செய்துகொள்ளும் புதிய உடன்படிக்கையில் ஜப்பான் இல்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில் பழைய உடன்படிக்கையை மாற்றியமைக்க முடியவில்லை என பொய்களை கூறிக்கொண்டு புதிய உடன்படிக்கையை  நடைமுறைப்படுத்தி அதன் மூலம் துறைமுகத்தை சர்வதேச நிறுவனங்களுக்கு கொடுக்கவே அரசாங்கம் முயற்சித்து வருகின்றது எனவும் அவர் தெரிவித்தார்.