May 24, 2025 11:42:18

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளத்தை வழங்கு’ : மஸ்கெலியாவில் ஆர்ப்பாட்டம்

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொடுக்குமாறு வலியுறுத்தி, நுவரெலியா மாவட்டத்தின் மஸ்கெலியா நகரில் இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

பெருந்தோட்ட தொழிலாளர் ஊதிய உரிமைக்கான இயக்கத்தின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மலையக சிவில் அமைப்புகளும் ஆதரவு வழங்கியிருந்தன.

தனிமைப்படுத்தல் சட்டத்திட்டங்களை பின்பற்றி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தினர்.

” மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டுமென்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு 6 வருடங்கள் கடந்துள்ளன. இக்காலப்பகுதியில் பொருட்களின் விலை அதிகரித்து, வாழ்க்கைச்சுமையும் அதிகரித்துள்ளது. இதனால் எவ்வித நிபந்தனையுமின்றி அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்படவேண்டும்” என்று ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

அதேபோன்று 25 நாட்கள் வேலை வழங்கப்படுவதையும் தோட்டக் கம்பனிகள் உறுதிசெய்யவேண்டும் என்றும், இந்த விடயத்தில் அரசாங்கத்தின் தலையீடுகள் அவசியமாகும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.