
கொழும்பு நகருக்குள் அமுலாகியுள்ள ‘வீதி ஒழுங்கை’ சட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
கடந்த திங்கட்கிழமை முதல் கொழும்பு நகருக்குள் பிரதான வீதிகளில் ஒழுங்கை சட்டம் அமுல்படுத்தப்பட்டதுடன் இந்த வாரம் முழுவதும் சாரதிகளுக்கு தெளிவுப்படுத்துவதற்காக விசேட சலுகைக் காலம் வழங்கப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும் திங்கட் கிழமைக்கு பின்னர் இந்த சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளதுடன், இதன்போது சட்டத்தை மீறும் சாரதிகள் 2000 ரூபா தண்டப்பணத்திற்கு உள்ளாகுவர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை புதன்கிழமை முதல் ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிள்கள் பஸ்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள இடப்பக்க ஒழுங்கையிலேயே பயணிக்க வேண்டுமென்று அறிவிக்கப்பட்டிருந்த போதும், அதில் தளர்வுகளை மேற்கொள்வதற்கு பொலிஸ் அதிகாரிகளினால் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இதன்படி இடப்பக்க ஒழுங்கையில் வாகன நெரிசல் நேரத்தில் வலது பக்க ஒழுங்கையில் வாகன நெரிசல் இல்லாமல் இருந்தால், வலப்பக்க ஒழுங்கையிலும் ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு பயணிக்க முடியுமென்று பொலிஸார் அறிவித்துள்ளனர்.