July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கூட்டு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டு மகிந்தவே நாட்டைக் காட்டிக் கொடுத்தார்; மங்கள சமரவீர

கோட்டாபய அரசு தற்போது கூறுவது போல் ஜெனீவாவில் இராணுவத்தினரையும் ராஜபக்ச குடும்பத்தினரையும் நல்லாட்சி அரசு காட்டிக்கொடுக்கவில்லை. அன்று பான் கீ – மூனுடன் இணைந்து மகிந்த ராஜபக்சவே நாட்டைக் காட்டிக் கொடுத்தார் என்று முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

இறுதிப்போர் முடிவடைந்த கையுடன் போர்க்குற்றச்சாட்டுகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தப்படும் என்று அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சர்வதேசத்துக்கு வாக்குறுதி வழங்கியிருந்தார். அது தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகமாக இருந்த பான் கீ – மூனுடன் இணைந்து ஆவணங்களில் மகிந்த கைச்சாத்திட்டும் இருந்தார்.

போர்க்குற்றங்கள் தொடர்பான விவகாரத்துக்கு மகிந்தவே முழுப்பொறுப்பு. இறுதிப்போரில் போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் இடம்பெறவில்லையெனில் ஐ.நா.வின் கூட்டு உடன்படிக்கையில் அன்று மகிந்த கையெழுத்திட்டிருக்கக்கூடாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

போர்க்குற்றங்கள் தொடர்பில் பேசுவதற்குப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவுக்கு எந்தத் தகுதியும் கிடையாது. ஏனெனில் அவரும் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகிய நபராவார் எனவும் மங்கள சுட்டிக்காட்டினார்.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர ஒவ்வொரு தடவையும் வாய்க்கு வந்த மாதிரி பேசுகின்றார். போர்க்குற்றங்கள் தொடர்பில் பேசுவதற்கு அவருக்கும் எந்த அருகதையும் கிடையாது. அவரின் பொறுப்பற்ற கருத்துக்கள் சர்வதேச அரங்கில் இலங்கையை தலைகுனிய வைக்கும்.

போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இலங்கை மீதான சர்வதேச விசாரணையைத் தவிர்க்கும் வகையிலேயே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு நல்லாட்சி அரசு இணை அனுசரணை வழங்கியிருந்தது. அதன் ஊடாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவையும் இராணுவ அதிகாரிகளையும் மின்சாரக் கதிரையில் இருந்து காப்பாற்றினோம்.

இந்த நிலையில், இலங்கை தொடர்பான ஐ.நா. மனித உரிமைகள் சபையின் தீர்மானத்தின் இணை அனுசரணையிலிருந்து கோட்டாபய அரசு விலகிக்கொண்டமை முற்றிலும் தவறானதாகும். இதனால் பாரிய விளைவுகளை இம்முறை ஜெனீவாவில் இந்த அரசு சந்திக்கப் போகின்றது.

இது பொருளாதார ரீதியில் மோசமான நிலைமையையும் இலங்கைக்குத் தோற்றுவிக்கக்கூடும். சர்வதேச மட்டத்தில் இலங்கை தனிமைப்படுத்தப்படவும் கூடும். இராஜதந்திர மட்டத்தில் தீர்வு காணப்பட வேண்டிய விடயத்தை இன்று அரசு சர்வதேச அரங்கில் ஊதிப்பெருப்பித்துள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.