July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மன்னார் டிப்போ பஸ் பணியாளர்கள் பணி பகிஸ்கரிப்பு போராட்டம்!

இலங்கை போக்குவரத்து சபையின் மன்னார் டிப்போ பஸ் பணியாளர்கள் பணி பகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று காலை முதல் பகிஸ்கரிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ள அவர்கள், மன்னார் பஸார் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டத்தையும் முன்னெடுத்தனர். மன்னாரில் இருந்து அரச போக்குவரத்துச் சேவையினை மேற்கொள்ள மன்னார் நகர சபையினால் தற்காலிகமாக வழங்கப்பட்டிருந்த இடம் நேற்று (15) இரவு முதல் மூடப்பட்ட நிலையில், தங்களுக்கு எவ்வித முன் அறிவித்தலும் விடுக்கப்படாது அந்த இடம் மூடப்பட்டுள்ளதாக தெரிவித்தே, அவர்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இவர்களின் போராட்டத்தால், மன்னாரில் இ.போ.ச பஸ்கள் சேவையில் ஈடுபடவில்லை. இதனால் பாடசாலை மாணவர்களும் , தொழிலுக்கு செல்வோரும் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

மன்னார் நகர சபையின் புதிய பஸ் தரிப்பிட பணிகள் முழுமையடைந்த நிலையில் அங்கிருந்து அரச மற்றும் தனியார் பஸ் சேவைகளை நடத்த தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஆனபோதும் மன்னார் நகர சபையிடம் கால அவகாசத்தை பெற்று தொடர்ச்சியாக தற்காலிகமாக வழங்கப்பட்ட இடத்தில் இருந்தே அரச போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.

இதன்படி அந்த இடத்திற்கான கால அவகாசம் முடிவடைந்ததை தொடர்ந்து மன்னார் நகர சபையினால் அரச பஸ் போக்குவரத்துக்கென தற்காலிகமாக வழங்கப்பட்ட இடம் மூடப்பட்டுள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது.