October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மாகாண சபைகள் தேர்தல் மேலும் ஒத்தி வைக்கப்படும் சாத்தியம்

இலங்கையில் மாகாண சபைகளுக்கான தேர்தலை அவசரமாக நடத்தாது, மேலும் சில காலத்திற்கு ஒத்தி வைப்பதற்கு அரசாங்கத்திற்குள் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

நேற்று கொழும்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ தலைமையில் நடைபெற்ற ஆளும் கட்சிக் குழுக் கூட்டத்திலேயே இந்த யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்தக் கூட்டத்தில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டுள்ளனர்.

மாகாண சபைகளுக்கான தேர்தலை விரைவில் நடத்த வேண்டுமென்று வலியுறுத்தி, உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சரினால் அமைச்சரவைக்கு சமர்பிக்கப்பட்டுள்ள யோசனை தொடர்பாக இந்தக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதன்போது நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று நிலைமையில், தேர்தலை இப்போதைக்கு நடத்துவதில் காணப்படும் சிக்கல்கள் தொடர்பாக கட்சித் தலைவர்கள் சிலர் கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.

இதேவேளை அவசரமாக தேர்தலை நடத்தாது, புதிய அரசியலமைப்பு தயாரிக்கப்பட்ட பின்னர் தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கையெடுக்க வேண்டுமென்று மேலும் சிலர் குறிப்பிட்டுள்ளதாக அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் இந்தக் கூட்டத்தில் தேர்தலை எப்போது நடத்துவது என்பது தொடர்பாக தீர்மானங்கள் எதுவும் எடுக்கப்படவில்லை எனவும், இது தொடர்பாக மீண்டும் கலந்துரையாடுவதற்கு முடிவு செய்யப்பட்டதாகவும் எஸ்.எம்.சந்திரசேன குறிப்பிட்டுள்ளார்.