July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மதுசாரம், எத்தனோல் உற்பத்திக்கு சோளம் பயன்படுத்தப்படுவதற்கு தடை!

File Photo

மதுசாரம்,  எத்தனோல் உற்பத்திக்கு சோளம் பயன்படுத்துவதை முழுமையாக தடைசெய்து வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுமாறு மதுவரி ஆணையாளருக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை விவசாயிகளிடமிருந்து மஞ்சள், சோளம் உள்ளிட்ட அறுவடைகளை கொள்வனவு செய்யும் போது முறைகேடுகளில் ஈடுபடும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த நடவடிக்கையெடுக்குமாறு ஜனாதிபதியினால், சுங்கப் பணிப்பாளர் நாயகம் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இத்துறைக்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சர்கள், அதிகாரிகள் ஆகியோரை நேற்று சந்தித்த போதே ஜனாதிபதி இவ்வாறு அறிவுறுத்தியுள்ளார்.

உள்நாட்டு விவசாயிகள் மஞ்சள் மற்றும் சோளம் பயிர்ச்செய்கையை வெற்றிகரமாக விரிவுபடுத்தியுள்ளனர். எதிர்வரும் பெரும்போகத்தில் அவர்கள் அறுவடையை பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளனர். இதன்படி விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்க வேண்டும் என்று ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

மேலும், சட்டவிரோதமாக கொண்டுவரப்படும் மஞ்சளை அழித்துவிடுமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.