May 27, 2025 17:53:07

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இலங்கையில் கொரோனாவால் இறந்தவர்களை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டாம்’: தேரர்கள் கொழும்பில் ஆர்ப்பாட்டம்

இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கக் கூடாது என்று கோரி, பௌத்த அமைப்புகள் இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

தேசிய அமைப்புகளின் ஒன்றியம், புதிய சிங்கள ராவய, சிங்க லே அமைப்பு உட்பட பௌத்த அமைப்புகளின் தேரர்கள் ஒன்றிணைந்து, கொழும்பு காலி முகத்திடல் மற்றும் ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பௌத்த தேரர்கள் பொலிஸ் தடுப்புகளை மீறி ஜனாதிபதி செயலகத்தினுள் நுழைய முயற்சித்த போது, அங்கு பதட்ட நிலையொன்றும் ஏற்பட்டுள்ளது.

ஜனாதிபதியிடம் செய்தி மடலொன்றைக் கையளிக்கவே தாம் ஜனாதிபதி செயலகத்திற்குச் செல்ல முற்பட்டதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது, சுகாதார அமைச்சர் அங்கு வந்துள்ளதோடு, அவரிடம் மக்களைத் தெளிவூட்டுவதற்கான செய்தி மடல் கையளிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் அனைவருக்கும் ஒரு சட்டமே இருக்க வேண்டும் என்றும் கொரோனா தொற்றால் மரணிக்கும் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதிக்கக் கூடாது என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.