July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொத்தமல்லி என்ற பெயரில் உக்ரைனில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட விவசாயக் கழிவுகள்

File Photo

கொத்தமல்லியை இறக்குமதி செய்யும் போர்வையில உக்ரைன் நாட்டிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட விவசாயக் கழிவுகள் அடங்கிய 8 கொள்கலன்கள் சுங்கப் பிரிவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

குறித்த கொள்கலன்களில் நான்கு கொள்கலன்கள் நேற்று மாலை சோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது அவற்றில் விவசாயக் கழிவுகள் இருப்பது தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இலங்கையிலுள்ள 8 இறக்குமதியாளர்களினால் உக்ரைனிலுள்ள ‘அக்ரோனிகா டிரேட்’ எனப்படும் நிறுவனத்திடமிருந்து கடந்த 10 ஆம் திகதி இந்த கொள்கலன்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் 20 கொள்கலன்கள் கடந்த 21 ஆம் திகதி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் சுங்க ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.

குறித்த கொள்கலன்களில் கொத்தமல்லி இருப்பதாகவே ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், இதன் அந்த ஆவணங்களுக்கமைய இறக்குமதி செய்யப்பட்டிருக்க வேண்டிய கொத்தமல்லியின் பெறுமதி, வரி நீங்கலாக 756 இலட்சம் ரூபா எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறக்குமதியாளர்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளார்களா என்பது குறித்து ஆரம்பகட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், இடைத்தரகர்கள் சூழ்ச்சி செய்துள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவிப்பதாக சுனில் ஜயரத்ன குறிப்பிட்டார்.

இலங்கை சுங்கத்தின் சட்டங்களுக்கு அமையவும், சுற்றாடல் சட்டத்திற்கு அமையவும், தாவர பாதுகாப்புச் சட்டத்தின் கீழும் அவற்றை இலங்கைக்கு இறக்குமதி செய்யவோ அல்லது வைத்திருக்கவோ முடியாது என்பதால், அவற்றை மீண்டும் உக்ரைனுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சுங்க பேச்சாளர் தெரிவித்துள்ளார்.