
file Photo: Facebook/Bandaranaike International Airport
இலங்கையில் வெற்றிகரமான தனிமைப்படுத்தல் செயல்முறைக்குப் பின்னரே சுற்றுலா பயணிகளுக்காக விமான நிலையத்தை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணான்டோபுள்ளே இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்பாட்டு செயல்முறைக்கு மிகவும் பொருத்தமான திட்டம் விமான நிலையத்தில் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆராய்ந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில், அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் நாட்களில் சுற்றுலாப் பயணிகளுக்காக நாட்டைத் திறப்பதற்கு அரசாங்கம் சரியான வேலைத் திட்டங்களை முன்னெடுத்துச் செல்கின்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கு வருவதற்கு 72 மணித்தியாலங்களுக்கு முன்னதாக மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் தொற்று ஏற்படாமை உறுதிசெய்யப்பட்டால் மாத்திரமே நாட்டுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு நாட்டுக்குள் வருபவர்களுக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பின்னரே சுற்றுலாப் பயணங்களைத் தொடர அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.