July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொழும்பில் 9 பொலிஸ் பிரிவுகளிலும் தனிமைப்படுத்தல் தொடரும் : இலங்கையின் இன்றைய நிலவரம்

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளான 592 பேர் இன்றைய தினத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 37,259 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை கொரோனா தொற்றியோரில் 715 பேர் இன்றைய தினத்தில் குணமடைந்து சிகிச்சை நிலையங்களில் இருந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்படி தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 28,267 ஆக உயர்வடைந்துள்ளதாக கொவிட் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள் தொடர்பான அறிவித்தல்

கொழும்பு, கம்பஹா மாவட்டங்கள் உள்ளிட்ட மேல்மாகாணத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் சிலவற்றை தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பதற்கும், மற்றைய பிரதேசங்களை தொடர்ந்தும் தனிமைப்படுத்தலில் வைத்திருக்கவும் கொவிட் தடுப்புக்கான தேசிய செயலணி தீர்மானித்துள்ளது.

இதற்கமைய கொழும்பில் வெள்ளவத்தை பொலிஸ் பிரிவில் கோகிலா வீதி, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவில் சாலமுல்ல கிராமசேவகர் பிரிவு ஆகிய பிரதேசங்கள் தனிமைப்படுத்தலில் இருந்து நாளை அதிகாலை 5 மணி முதல் விடுவிக்கப்படவுள்ளன.

ஆனபோதும்  மோதரை, கொட்டாஞ்சேனை, கிரேண்ட்பாஸ், ஆட்டுப்பட்டித்தெரு, டேம் வீதி, வாழைத்தோட்டம், மாளிகாவத்தை, தெமட்டகொட, மருதானை ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட பிரதேசங்களும், கொம்பனித்தெரு பொலிஸ் பிரிவில் வேகந்த கிராமசேவகர் பிரிவு, பொரளை பொலிஸ் பிரிவில் வனாத்தமுல்ல கிராமசேவகர் பிரிவு மற்றும் மட்டக்குளி பொலிஸ் பிரிவில் பேர்ஹசன் வீதியின் வலதுபக்கம், வெள்ளவத்தை மயூரா பிளேஸ் மற்றும் நசீர்வத்த ஆகிய பிரதேசங்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கம்பஹா மாவட்டத்தில் வத்தளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கெரவலப்பிட்டிய கிராமசேவகர் பிரிவு, பேலியாகொட பொலிஸ் பிரிவில் கஹபட கிராமசேவகர் பிரிவு, கிரிபத்கொட பொலிஸ் பிரிவில் வெலேகொட வடக்கு ஆகிய பிரதேசங்கள் தனிமைப்படுத்தலில் இருந்து நாளை காலை முதல் விடுவிக்கப்படவுள்ளது.

ஆனால் அந்த மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள மற்றைய பிரதேசங்களில் தனிமைப்படுத்தல் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மற்றைய மாவட்டங்களில் ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களும் மறு அறிவித்தல் வரையில் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.