July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”ஜெனிவாவில் இலங்கை அரசாங்கத்திற்கு கால நீடிப்பு வழங்கப்படக் கூடாது”

தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் ஜெனிவாவில் இலங்கை அரசாங்கத்திற்கு கால நீடிப்பு வழங்கப்படக் கூடாது என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி தீர்மானித்துள்ளதாக வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் நான்கு கட்சிகள் அடங்கிய குழுவின் ஆலோசனைக் கூட்டம் இன்று கட்சியின் அலுவலகத்தில் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி. விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தின் முடிவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த எம். கே. சிவாஜிலிங்கம், இந்தக் கூட்டத்தில் எதிர்வரும் ஜெனிவா கூட்டத்தொடரில் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும்,  டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் அரசியல் தீர்வு யோசனையை சமர்ப்பிப்பது தொடர்பாகவும் மற்றும்  எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலை தமிழ் மக்கள் தேசிய கூட்டணி வடக்கு – கிழக்கு மாகாணங்களில் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்றும் கலந்துரையாடப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது ஜெனிவா விடயம் தொடர்பாகவே முக்கியத்துவம் கொடுத்து கலந்துரையாடப்பட்டதாகவும், குறிப்பாக ஜெனிவா கூட்டத்தொடர் தொடர்பில் மூன்று பிரதான தமிழ் தேசிய கட்சிகளும் இணைந்து ஒரு யோசனையை முன்வைத்தால் அதே யோசனையை ஏனைய சிவில் அமைப்புக்கள், மதப் பெரியார்கள், பல்கலைக்கழக மாணவர்கள், மற்றும் புலம்பெயர் அமைப்புகளும் ஏற்றுக்கொண்டால் அது ஒரு சிறந்த நிலைப்பாடாக இருக்கும் என்ற நிலைப்பாட்டுக்கு வந்ததாகவும் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

மேலும், இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினருக்கும் தெரியப்படுத்தவுள்ளதாகவும், அவர்களும் இணைந்து ஒரு முடிவு எடுக்கக் கூடிய வகையிலேயே இந்த யோசனைத் திட்டம் அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அந்தவகையில், குறித்த கட்சிகளினால் மாற்று யோசனைகள் முன்வைக்கப்படுமாயின் அதற்கு ஏற்றவாறு முடிவுகள் மாற்றப்படும் எனவும், குறிப்பாக இலங்கை அரசாங்கத்திற்கு கால நீடிப்பு வழங்கப்பட கூடாது என்ற அடிப்படையில் குறித்த யோசனைத் திட்டம் அமைய வேண்டும் என்பதே தமது கோரிக்கையாக இருப்பதாகவும் சிவாஜிலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.