July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா தொற்று காரணமாக பிறந்து 45 நாட்களேயான குழந்தை உயிரிழப்பு

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பிறந்து 45 நாட்களேயான ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிமோனியாக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் குறித்த குழந்தை கொழும்பு லேடி ரிட்ஜ்வே தேசிய சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே இந்த உயிரிழப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையிலேயே குழந்தையின் உயிரிழப்புக்கான காரணம் குறித்து கண்டறிவதற்காக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் குழந்தைக்கு கொரோனாத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும், கொரோனா தொற்று காரணமாகவே குழந்தை உயிரிழந்துள்ளதாகவும்  வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கடந்த 8ஆம் திகதி பிறந்து 20 நாட்களேயான ஆண் குழந்தை ஒன்ற இதே வைத்தியசாலையில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ,இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன அறிவித்துள்ளார்.

அகலவத்தை பகுதியைச் சேர்ந்த 72 வயதான ஆண் ஒருவர் கொரோனாத் தொற்றால் இன்று உயிரிழந்துள்ளார். கடந்த 11ஆம் திகதி அகலவத்தை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார். கொரோனாத் தாக்கத்துடன், அதிக இரத்த அழுத்தம் மற்றும் இருதய நோயே இந்த உயிரிழப்புக்கான காரணம் எனக் கண்டறியப்பட்டுள்ளது.

மக்கோன பகுதியில் 86 வயதான பெண் ஒருவர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளார். கடந்த 15ஆம் திகதி தனது வீட்டிலேயே அவர் உயிரிழந்துள்ளார். கொரோனா வைரஸ் தாக்கத்துடன், அதிக இரத்த அழுத்தம் மற்றும் இருதய நோயே இந்த உயிரிழப்புக்கான காரணம் எனக் கண்டறியப்பட்டுள்ளது.

கொழும்பு – 15 ஐச் சேர்ந்த 76 வயதான ஆண் ஒருவர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளார். கொரோனாத் தொற்றாளர் என அடையாளம் காணப்பட்ட நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு, அங்கிருந்து ஹோமாகம வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையிலேயே அவர் இன்று உயிரிழந்துள்ளார். கொரோனாத் தொற்றுடன் ஏற்பட்ட நியூமோனியா தாக்கமே சாவுக்கான காரணம் எனக் கண்டறியப்பட்டுள்ளது.

மஹரகம பகுதியைச் சேர்ந்த 50 வயதான ஆண் ஒருவர் கொரோனாத் தொற்றால் இன்று உயிரிழந்துள்ளார். கொழும்பு தெற்கு ஆதார வைத்தியசாலையிலிருந்து ஹோமாகம வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.கொரோனாத் தொற்றுடன் ஏற்பட்ட நியூமோனியா தாக்கமே இந்த உயிரிழப்புக்கான காரணம் எனக் கண்டறியப்பட்டுள்ளது.

அதேவேளை, வத்துபிட்டிவல பகுதியைச் சேர்ந்த 86 வயதான ஆண் ஒருவர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளார்.

இலங்கையில் கொரோனாத் தொற்றால் இதுவரை 165ஆக உயிரிழந்துள்ள நிலையில், அவர்களில் 152 பேர் கொரோனாவின் மூன்றாவது அலையில் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.