
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக மரணமடைந்த 160 பேரில், 117 பேர் கொழும்பு மாவட்டத்திலேயே உயிரிழந்துள்ளனர் என்று கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.
இதேவேளை, கம்பஹா மாவட்டத்தில் 15 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 11 பேரும், புத்தளம் மாவட்டத்தில் 5 பேரும், குருநாகல் மாவட்டத்தில் 4 பேரும், மாத்தறை மாவட்டத்தில் 2 பேரும் உயிரிழந்துள்ளனர்.
மாத்தளை, கண்டி, நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் மரணமடைந்துள்ளார்.
உரிய அடையாளம் உறுதிப்படுத்தப்படாத ஒரு உயிரிழப்பும், சிறைச்சாலைகளில் இரண்டு கொரோனா உயிரிழப்புக்களும் பதிவாகியுள்ளன.
அத்துடன், நாட்டில் பதிவான 160 உயிரிழப்புக்களில் 98 உயிரிழப்புக்கள் வைத்தியசாலையில் பதிவாகியுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டில் அல்லது வைத்தியசாலைக்கு அழைத்துவரும் சந்தர்ப்பத்தில் 62 பேர் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனாவின் மூன்றாவது அலையின் தாக்கத்தில் 147 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 4 பேர் 30 வயதுக்குக் குறைந்தவர்கள் எனவும், 100 பேர் 61 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றும் கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் மேலும் தெரிவித்துள்ளது.
.