
புனரமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை தென்மேற்கு உப்புவயல் குளம் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வாவினால் இன்று மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.
யாழ். மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியின் வழிகாட்டலில், தியாகி அறக்கொடை நிறுவனத்தினரின் நிதிப் பங்களிப்பில், இராணுவத்தினரால் இந்தக் குளம் புனரமைப்புச் செய்யப்பட்டுள்ளதுடன் இன்றைய தினம் பொது மக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளது.
யாழ். நண்பர்கள் அமைப்பு, வட்டுக்கோட்டை தென்மேற்கு விவசாய சம்மேளனம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் அந்தக் குளத்தை மக்களிடடம் கையளிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
இதன்போது, யாழ். மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார, யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன், யாழ். இந்திய துணைத் தூதுவர், வலி மேற்கு பிரதேச சபை தவிசாளர், வட மாகாண நீர்ப்பாசன பணிப்பாளர் மற்றும் இராணுவ உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.