October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ்ப்பாணம் – உடுவில் பிரதேச செயலாளர் பிரிவு முழுமையாக முடக்கப்பட்டுள்ளது

யாழ்ப்பாணம் – உடுவில் பிரதேச செயலாளர் பிரிவு கொரோனா தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் நேற்று இரவு முதல் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

குறித்த பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் 7 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த வைரஸ் தொற்றானது அங்கு மேலும் பரவாதிருப்பதை தடுப்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அந்த பகுதிகளிலுள்ள 30 கிராம சேவகர் பிரிவுகளில் 28 பிரிவுகளில் கொரோனாத் தொற்றாளர்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் சுகாதாரத் துறையினர் ஆகியோரின் ஆலோசனைக்கு அமைய இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

மேலும் இது குறித்து மக்கள் அச்சமடையத் தேவையில்லை எனவும் தேவையற்ற செயற்பாடுகளை தவிர்த்து தமது வீடுகளிலேயே இருக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேவேளை அத்தியாவசிய தேவைகளுக்காக செல்பவர்கள் மாத்திரம் குறித்த பகுதிக்குள் செல்ல அனுமதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் மருத்துவ சுகாதார சேவைகள் தவிர்ந்த ஏனைய நடவடிக்கைள் முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து குறித்த பகுதியின் எல்லைக் கிராமங்களில் பொலிஸார் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேவேளை நேற்றைய தினம் வவுனியா மாவட்டத்தின் புதிய சாளம்பைக்குளம் பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் இருவர் அடையாளம் காணப்பட்டதையடுத்து குறித்த பகுதி மறு அறிவித்தல் வரை முற்றாக முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

This slideshow requires JavaScript.