July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

உலகில் யானை- மனித மோதலில் அதிக யானைகள் உயிரிழக்கும் நாடாக இலங்கை

யானை- மனித மோதல் காரணமாக, உலகில் அதிகளவு யானைகள் உயிரிழக்கும் நாடாக இலங்கை காணப்படுவதாக அரச கணக்குகள் பற்றிய குழுவின் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

அத்துடன், யானை- மனித மோதலில் அதிகளவான மனிதர்கள் உயிரிழக்கும் நாடுகள் பட்டியலிலும் இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

யானை- மனித மோதல் தொடர்பாக, பல வருட முன்னனுபவமிக்க நிபுணர் பேராசிரியர் ப்ருதிவிராஜ் பெர்ணான்டோ, அரச கணக்குகள் பற்றிய குழுவில் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.

யானை- மனித மோதலில் அதிகளவான மனிதர்கள் உயிரிழக்கும் நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, யானை- மனித மோதல் காரணமாக அண்ணளவாக வருடமொன்றுக்கு 272 யானைகள் உயிரிழப்பதுடன், கடந்த வருடம் குறித்த தொகை 407 ஆக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யானை- மனித மோதலில் வருடமொன்றுக்கு 85 மனிதர்கள் கொல்லப்படுகின்ற நிலையில், 2019 ஆம் ஆண்டு 122 மனித கொலைகள் பதிவாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

60 ஆண்டு காலமாக யானை- மனித மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டாலும், நிலைமை மோசமடைந்துள்ளதே தவிர தீர்வுகளில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்பதும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

யானை- மனித மோதல்களுக்குத் தீர்வைக் காண, புதிய முயற்சிகள் முன்னெடுக்கப்பட வேண்டியதன் முக்கியத்துவமும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து, குறித்த விடயம் தொடர்பில் விரைவான நடவடிக்கைகளை மேற்கொண்டு, 3 வாரங்களுக்குள் அறிக்கையை சமர்ப்பிக்க அரச கணக்குகள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.